வெறும் மணற்பந்துகள்...


வெள்ளைத்தாள்களை பிரசவிக்கும் ஓவியங்கள்,
வெளிர் நாளில் குளிர்கால மேகம்
வெளிர் பனியை பிரசவிக்கும்.

ஒளிர் கதிரவன் தளிரிளம் பனியுள்
ஒளிந்து விளையாடும்.
ஒளி விளையாடும் பனிக்குளம்,
உயிர் விளையாடும் பனிக்குடம்...
உடையலங்காரம் இல்லை, உணவு நேரம்
வெறுமையே விருந்தானது.

இருளைப்போர்த்துக் கொண்டு
முடங்கிக் கிடக்கும் இவ்வுயிர்
முள்ளந்தண்டை எட்டித் தொட,
வெல்லத்தண்டை கசக்க கசிந்த
வெள்ளத்துள் வெல்லத்தூள்...

வில்லை, தெறித்துப்போன 
நுண்துகள்களைப்போலே, வெண்
மண்துகள்களைப் போலே
வெல்லத்தண்டை கசக்கி வெளியேறியது வெல்லம்...
மெல்லத்தூவும் மழை
வெல்லத்தூளை வாரிக்கொள்ளும்.

வெள்ளைத்தாளை வாங்கிக் கொண்ட வெள்ளைத்தாதிகள்.
வைத்திய சாலையோர சாலையில்
தலையாட்டும் தாலாட்டு மழை.
தலையாட்டும் தலைமைகளுக்கு
வாலாட்டும் இளமைகளையெல்லாம்
வாரிக்கொண்டு போக வானம்
கொட்டும் வாழ்த்து மழை.

கொட்டக் கொட்ட குலையும் நிலம்
தட்டத் தட்ட திமிரும் சிரம்
வெட்ட வெட்ட விளையும் வினை
முட்டி முட்டி முகம் நனைக்கும்
கெட்டிக் கண்ணீர் கொட்டிக் கிடக்கும்
கண்ணீர்த் தொட்டில்...

பெற்றதால் பொன்மேனி செம்பிழந்த
செம்பொன்னாக,
வெறுமை படுத்துறங்கும் தொட்டில் கண்டு 
அந்த ஓவியம் உறக்கமிழக்கும்.
வெள்ளைத்தாளை காணாது
உள்ளம் வெதுப்பகமாகும்.
ஓவியங்களாகாமல் வெறும் தாள்களாகவே -தம் 
காவியங்களை தலைமுழுகிய 
வெள்ளைத்தாள்களுக்கோர் கவிதை...

காலவெள்ளத்தில் காலனால்
கரைசேர்ந்த காகிதக்கப்பல்களே,
கரைசேராமல் இங்கே பல 
டைட்டானிக்குகள் கண்ணீர்க்கடலில்,
பாய்மரம் கட்டிய பலகைகள்...

வாழ்க்கை கடலில் யாக்கை நோகும்
முன்னே வாழ்க்கை நோகும் 
நேரம் வந்தால் வெந்து போகாதே,
நொந்து போன மனங்களே - கனல்
பந்தாடும் நாம் வெறும் மணற்பந்துகள்...


-சி.சதுர்

Comments

Popular Posts