வேத்தியம்

மொழி பல ஒலிக்கையில் மனிதமும் ஒலிக்குமிந்த

மைந்தர்கள் மன ஒலி கேட்டதுண்டோ

உளி கொண்டு அடிக்கையிலும் வலி கண்டு

வழி கண்ட எம் வேத்தியவிழிகளை பார்த்ததுண்டோ

 

சங்கப்பலகை சந்தித்த பொழுதுகள் மனதில் செப்பேடுகளாய். – சேர்த்த

தங்கப்பதக்கங்கள் நாம் சந்தித்த சமர்களின் சரிதங்களாய்

துகிலிகை எழும் தாளில் தவழும் மைத்திவலைகள் போல – நாங்கள்

முகிலிடை விழும் தாரகை தழுவும் எம் தாயான தாயே

 

மைதானப் பந்தின் மேலே தாவும் மைனாக்கள் ஆனோம்

கைதான பூக்கள் போலே உன் வாசல்க்கைதிகள் ஆனோம்

தாய்நிலம் திரும்பும் விதைகளாய் மீண்டும் நாம் வேர்விடவேண்டும்

காயமே பொய்யென்ற போதும் எம் கனவுகள் மெய்யாக வேண்டும்

 

கருவுக்குள் ஒளிந்துகொண்டு கனவு காணும் சிசுக்கள்

கருக்கல் கரைய விழிமடல் தந்தாய் – கண்ணின்

கருக்குழியில் ஒளிபடும் நாள்வரை எமை சுமந்தாய்

கல்வி மொழியுடன் கைகளில் கனவுகள் தந்தாய்

 

நினைவுகள் தந்தாய் எம் நிழலாடிய நிலங்களில்

விளையாடிய வேளைகள் கழலாடும் நெஞ்சுடன்

கற்றுத்தந்தாய் வெற்றிக்கோப்பையும் தந்தாய்

சதை பிரியா நக நண்பர்கள் தந்தாய்

 

முக நக நட்புகள் அன்றியும்  அக நக நட்புகள்

இக பரமின்றி இணையாய்த் தந்தாய்

யக நக தக தக நக யக வென ஒலிக்கும்

யந்திர ஒலிகளிடை வேத்தியக் கதவுகள் மந்திர ஒலி ஒலிக்கும்

 

இந்திரம் வலுசேர்த்து இந்திரியம் வலுசேர்க்க

மந்திரம் வேறென்ன தந்திரம் தானென்ன

புத்திதான் எத்திக்கும் சித்திக்கும் வழிஎன்றாய்

தித்திக்கும் வழியெல்லாம் சித்திப்பதில்லை

சித்தித்த வழியெல்லாம் தித்திப்பதில்லை

 

சித்திரம் பேசும் சிலைகள் சரித்திரம் பேசிடும் கலைகள்

பத்திரம் செய்திங்கு பவித்திரம் கொய்தங்கு

எத்திறம் நிற்பினும் சொற்திறம் பேசிடும்

புத்திரர் புடை சூழ விவாதம் வளர்த்தாய்

 

சிச்சிலிக்குருவிகள் சிங்குவையுள் சிக்கிய சின்னமுள்ளை

சிட்டுக்குருவிகள் அங்கவை விக்கி விழிக்கையில்

பட்டுக்குருவிகளை பறக்கப் பழக்கினாய்

மஞ்சள் நீல மழைக்குருவிகள் தேடும் மழை மேகமே


-சி.சதுர்




Comments

Post a Comment

Popular Posts