எண்ணம்தொடும் என் வானத்தில்

எண்ணம்தொடும் என் வானத்தில் 

வண்ணம் விட்டுச் சென்ற வெண்மலரிவள்,

என்னைத்தொடும் இளங்காற்றில் தனியே

தன்னைவிட்டுச் சென்றவள்.


மைதட்டும் மனப்பேனை நீ தட்டிச் சென்றால்,

கைதட்டும் என்வரிகள் உன் பேரைச் சொன்னால்,

பொய்பேசப் பழகிடுதே என் பேனை உன்னால்,

மெய்பேசும் பைங்கவி நான்  பேதை முன்னால்.


இரு விழிகள் மோத இதயம்தேடி,

மழையைக்கொட்டி மேகம் விலக

ஒளியைக் கட்டி இழுக்கும் தேராய்

வானம் வளைத்த வானவில் வாராய் 


சொற்சேர்த்து சிறுகோட்டை நானெழுப்ப - முல்லைப்

பூக்கோர்த்து சிரிக்கிறாய், சரிகிறது சிதிலமாய்.

சொற்கூட்டி மறுகோட்டை கட்டுதற்கே வலியவேண்டும்

மனம், வார்க்கும் சிறுகூட்டில் நெலியும் நாணங்கள்.


முகில்களை சேர்த்தேன் உன் முகவரி தேட,

முகிழும் உன் விழித் தேன் மூழ்கிடும் தேனீ,

பகல்கனவுகள் பரிசளித்து, துயிலைத் துகிலுரித்தாய்.

நிகல் நொடி கடந்திடுமோ திகிலுடன் உரைகிறேன் 

நீ கடந்து சென்ற நொடிகளில்...


நகல் வடிவே அழகுன் துகள் வடிவே

உளச்சுமையே இளம்சுமையே உன்னைக்

கண்டபின் விழிரெண்டும் சிரித்திட

விழிநீர் இனிக்கிறது...


உன் சிரிப்பொலிகள் உள்ளத்து உளியொலிகள் -உன் 

குரல்நாண் அதிர்வில் இதய தாளம் தப்பும் தசைநார்,

உயிர் உதிர்கையில் புதிராய் வளையும் உன் புருவம்.

ஈசல் மனந்தான் உன் கண்ணிரண்டு குப்பிவிளக்கில் விழுந்துமே...


மீண்டும் உயிர்க்கிறேன், தூண்டில் விழிகளில் மாட்டியே

மீனாய்த் தவிக்கிறேன், வண்டில் மாடாக சுமக்கிறேன் உன்

நினைவுகள் மனதில், கூண்டிற் கிளியாய் தூண்டிற் புழுவாய்,

நினைவுகள் சுமந்திட வலிகள் கூலி...











Comments

  1. அடடா! எவ்வளவு அழகான வர்ணனை💫

    ReplyDelete

Post a Comment

Popular Posts