முழுமையடையா வரிகள்

முழுமையடையா வரிகள் சுமந்திடும் மனமே

உன் முகவரி தொலைந்திட நகல்வரிகள் முளைத்தன.

அகல்விளக்கொன்றின் அணையும் வெளிச்சத்தில் மனஈசல்

மயங்கிட அந்த வெளிச்சம் கேட்குது ஆயிரம் வினா.

வெளிச்சம் உறங்கிட வினாக்களும் உறங்கின, கனவுக்

காட்டில் சிறகுகள் உதறியே விட்டில் ஊர்கின்றன.


கண்விழித்தால் கண்முன்னே விளக்கும் விட்டிலும் மீளாஉறக்கத்தில்,

சிறு ஒளி தீண்டும் விட்டிலின் தேடலில் விளக்கு அறியுமோ,

விட்டிலின் காதலை.... இருள் சூழ்ந்திட விளக்கொளி தேடிடும்

விட்டில் கூட்டத்தில் தினம் தினம் உயிர்த்தெழுகிறேன்,

மீண்டுமொருமுறை தீண்டுமொளியில்  மாண்டிட...


பதில்கள், கிடப்பில் விட்டு வினாக்கள் சுமந்து ஓடும்

மனிதநதிகளில், ஓடையொன்று உன் விழிகளில் வழிந்திட,

அதன் கரைகளில் காத்திருக்கும் மனம் ஒரு மானாய்.

மாயநதிவழியோடும் நீரில் நீந்திடும் உன்விழிகள் மீனாய்,

மீன்கள் சுவாசித்த காற்றுக்குமிழிலியில் என் காலம் உருள்வதேன் தலைகீழாய்?


வானவில் தூரிகை உன் நாணத்தின் வண்ணம் கேட்கும்.

வானம் சுவாசித்த வண்ணமேகங்கள் அந்த நாணத்திடம் தோற்கும்.

ஒரு கவிதைத் தேடலில் இங்கு காகிதக்கந்தைகள்,

இந்தக் கவிதை பூத்திட காகிதச்சருகுகள் குவிகிறதே..


மௌனக்கொடுக்கல் வாங்கலில் நட்டம் எனக்கல்லவோ,

உன்மௌனக்கொடுக்குகள், மனதில் அதன் வடுக்கள்

தயக்கத் தோணியில் இக்கரையில் நான் - என்

வார்த்தைத் துடுப்புகள் அக்கரையில் உன்னுடன்...


மலர் வீசும் அவள் வாசம், மனம் வீசும் அவள் சுவாசம்,

விண்ணெலாம் விண்மீனாய், கண்ணே நீ என் பொன் மானாய்,

காணாமல் போனதேனோ, கானகம் பாலைநிலம் ஆனதேனோ?

கிளைவிழுந்த சிறு பறவை சிறகுகள் விரித்திட, 

உன் வானம் அளித்திடு, மனம் நடைபயில...


வருணனை வார்த்தைப்பூக்கள் கோர்த்திடும் உன்

இமைகள் பின்னலடித்திடும் இருவிழிகளில் மின்னல் உதிக்க

வானம் அழுதிடும் கோடித்துளிகளில் கரைகிறேன்.

உன் முதல்த் துளிப்பார்வை சுட்டுச் சென்றதென் பனிமனதை...


இரைகின்ற பாட்டொன்று மனதிலே மிதந்திட காற்றும்

சுமக்கிறது மெட்டொன்று எனக்காக, மொட்டொன்று நீயாக,

பனித்துளி நானாக விழுகையில் விழிக்கிறேன் பூவொன்றின் முகத்திலே,

காற்றின் காதுகள் உன் குரல் சுமந்துமே என் காதோடு உரசிச் செல்லுதே,

உன் மௌனம் ஆயிரம் வார்த்தை என்னிடம் சொல்லுதே...









Comments

Popular Posts