முரண்வாழ்

காடுகள் சுவாசிக்கும் ஒலி - காதோரம்
கைபேசிகளின் இரைச்சல்.
காகிதங்களின் தொடுகை - விரல்கள்
தழுவிடும் மின்திரை.
உணர்வுகளின் கனதி - இமோஜிகள்
சுமந்திடும் குறுஞ்செய்தி.

மண்வாசம், மழைமேகம் - பணம் 
துளிர்விடும் எம் நிலம்.
மணித்துளிகளில் நினைவுகள் - நொடிப்
பொழுதுகள் தவழும் மின்தரவுகள்.
சுடுமணல் ஓடி சுழிநீராடி, கிளையில்
காயும் ஈரமான நினைவுச்சட்டை.

சட்டைப்பைகளில் பட்டாம்பூச்சி
சேகரித்து காற்றில் விட்டு,
வண்டிப்பாதைத் தடத்தில்
சைக்கிள் பழகி முழங்கை சிராய்த்து,
கடலாடி கால்சராய் பைகளில்
மணிமணியாய் மணல்நினைவுகள்.

மணிக்கூண்டில் மாட்டித்தவிக்கும்
முட்கள் கைகடித்திட கால்கள் ஓடும்.
கடிகாரவட்டத்துக்குள் யாரோடு
எம் ஓட்டப்போட்டி?










Comments

Popular Posts